ஹைதராபாத்; பொதுமக்கள் சாப்பிடும் 100 விதமான உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவற்றில் 10 சதவீதத்துக்கும் அதிகமான உணவுப் பொருள்கள் பாதுகாப்பற்றவையாகவும், தரமற்றவையாகவும் இருக்கின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் தான் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி கடந்த 2021ஆம் ஆண்டில் ஜூன் 1 முதல் டிசம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொண்ட உணவுப் பரிசோதனை குறித்த முடிவுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க.. கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்
ஹைதராபாத் மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வு முடிவு குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், மொத்தமாக 926 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 98 உணவுப் பொருள்கள் பாதுகாப்பற்றவையாகவும், தரமற்றவையாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்கள் கலப்படம் நிறைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மசாலா பொருள்கள் அதிகளவில் கலப்படம் நிறைந்ததாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் விலை குறைந்த எண்ணெய்கள், விலை அதிகம் கொண்ட பேக்குகளில் அடைத்து இதுபோன்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது. பாமாயிலும், கலப்படம் செய்து பயன்படுத்தப்படுகிறது. சில உணவகங்களில் பருத்திக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
சில உணவகங்களில் விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பல உணவகங்களில் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் காய்ச்சி மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். food safety
பல உணவகங்களில், காய்கறிகள் பழங்கள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதே இல்லை, அதில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடனேயே சமைக்கப்படுகின்றன. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.