வடகிழக்கு மாநிலத்தின் கலாசாரம், மரபுகளுக்கு ஏற்ப மாநிலத்தில் நகரங்கள், ஊர்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'ஒரு பெயரில் நிறைய இருக்கிறது. ஒரு நகரம், கிராமத்தின் பெயர் அதன் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை பிரதிபலிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அசாமில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மக்களிடமும் பெயர் பரிந்துரைகள் கேட்கப்படுகிறது. இதற்காக தனியே ஒரு இணையதளமும் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை குவஹாத்தியில் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், 'கலபார் உள்ளிட்ட சில இடங்கள், மாநிலம் முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும். ஏனெனில் சில பெயர்கள் மக்கள் உச்சரிக்க வசதியாக இல்லை. சில சமூகங்களை இழிவுபடுத்துவனவாக உள்ளன. அவை மாற்றப்பட வேண்டும்' என்று கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், அசாமில் உள்ள ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவின் பெயரை மாற்றக்கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, 'ஒராங் தேசியப் பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.