காங்கிரஸிலிருந்து பல தலைவர்கள் விலகிவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் திவாரியும் அந்த பட்டியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் சமீபத்திய ட்விட்டர் பதிவு இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், யாரேனும் என்னை வெளியே தள்ள விரும்பினாலே தவிர, கட்சியிலிருந்து விலகும் திட்டம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் அக்கட்சியிலிருந்து செவ்வாய்கிழமை விலகினார்.
இதையடுத்து, புதன்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த மணிஷ் திவாரி திட்டமிட்டிருந்தார். கட்சியிலிருந்து விலகுவதை அறிவிப்பதற்காகவே அவர் செய்தியாளர் சந்திப்பை கூட்டவிருந்ததாக பேசப்பட்டுவந்தது.
இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிஷ் திவாரி, "இதை நான் முன்பே கூறியுள்ளேன். நான் காங்கிரஸ் கட்சியில் குத்தகைதாரர் அல்ல, கூட்டாளி. யாராவது என்னை வெளியே தள்ள விரும்பினாலே தவிர கட்சியிலிருந்து விலகும் திட்டம் இல்லை. அது வேறு விஷயம்.
இதையும் படிக்க | 54 சீன செயலிகள் முடக்கம்
ஆனால் என்னைப் பொறுத்த வரையில் எனது வாழ்நாளில் 40 ஆண்டுகளை இந்தக் கட்சிக்குக் கொடுத்துள்ளேன். நாட்டின் ஒற்றுமைக்காக எங்கள் குடும்பம் ரத்தம் சிந்தியது. கட்சியை விட்டு எந்தத் தலைவர் விலகினாலும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதை தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்" என்றார்.
அஸ்வனி குமார் விலகியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இது துரதிருஷ்டவசமானது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக மக்கள் பல செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு நபருக்கும் ஒரு லட்சியம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.