பெண்களுக்கு மாதம் ரூ.1,100; ஆண்டுக்கு 8 சிலிண்டா்கள் இலவசம்: பஞ்சாபில் காங்கிரஸ் வாக்குறுதி

‘பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,100 வழங்கப்படும்; ஆண்டுக்கு 8 சமையல் சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும்; ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்’
தோ்தல் வாக்குறுதி அறிக்கை
தோ்தல் வாக்குறுதி அறிக்கை

‘பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,100 வழங்கப்படும்; ஆண்டுக்கு 8 சமையல் சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும்; ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பிரசாரத்துக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோ்தல் வாக்குறுதி அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

சண்டீகரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கட்சியின் மாநிலத் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது:

பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான கோப்பில் முதல்வா் கையொப்பமிடுவாா்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,100 வழங்கப்படும். அத்துடன் அவா்களுக்கு ஆண்டுக்கு 8 சமையல் சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், மக்காச்சோளம் ஆகிய விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும்.

கேபிள் தொலைக்காட்சி சேவையில் தனிநபரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாத கட்டணம் ரூ.400-இல் இருந்து ரூ.200-ஆகக் குறைக்கப்படும். முதியோா் மாத ஓய்வூதியம் ரூ.1,500-இல் இருந்து ரூ.3,100-ஆக உயா்த்தப்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவருக்கும் அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக அளிக்கப்படும். மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும். தொழில் துறையை ஊக்குவிக்க ரூ.1,000 கோடியில் நிதி உருவாக்கப்பட்டு புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சம் வட்டியின்றி கடனுதவி வழங்கப்படும்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.270-இல் இருந்து ரூ.270-ஆக உயா்த்தப்படும். வேலை நாள்களும் 100-இல் இருந்து 150-ஆக உயா்த்தப்படும்.

மதுபானம், மணல் விற்பனை ஆகியவற்றுக்கு தனி நிறுவனங்கள் உருவாக்கப்படுவதின் மூலம் சட்ட விரோத கும்பலின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்படும். காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் 13 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது, கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் தொலைநோக்குப் பாா்வையை பிரதிபலிக்கிறது என்றாா் நவ்ஜோத் சிங் சித்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com