ஷோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஜைனாபோரா பகுதியில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் பகுதியில் உள்ள செர்மார்க், ஜைனாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் வந்த தகவலையடுத்து இன்று சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்ல பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
இதில், காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
வீர மரணம் அடைந்த வீரர்கள் 1 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) ஆயுதப்படையைச் சேர்ந்த வீரர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் சவான் ரோமித் தானாஜி என்பது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.