மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி மணமகன் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மூத்த காவல்துறை அலுவலர் ஒருவர் இன்று கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் கோட்டாவில் உள்ள ஆற்றில் கார்
கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காலை 7:50 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர மீட்புப்படையினர் காரிலிருந்து 7 உடல்களையும் தண்ணீரில் இருந்து 2 உடல்களையும் மீட்டனர். அந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "மணமகன் உள்பட ஒன்பது பேர் ஏற்றிச் சென்ற கார் சம்பல் ஆற்றில் விழுந்து உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இது துரதிர்ஷ்டமான சம்பவம். கலெக்டரிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்குவானாக, மறைந்த ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்றார்.
இம்மாதிரியான விபத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு 4.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதன் காரணமாக ஜிடிபியில் 3,14 சதவிகிதம் இழப்பு ஏற்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.