பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட 240 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புது தில்லி வந்தடைந்தனர்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி, உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் "போயிங் 787' விமானம், தில்லி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை பிற்பகல் 3 மணிக்குச் சென்றடைந்தது. அந்த விமானம் அங்கிருந்து மாணவர்கள் உள்பட 240 இந்தியர்களுடன் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு அந்த விமானம், தில்லி விமான நிலையத்தை இரவு 11.40 மணிக்கு வந்தடைந்தது.
முன்னதாக, உக்ரைனுக்கு விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு இந்திய விமான நிறுவனங்களிடம் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 17-ஆம் தேதி கேட்டுக் கொண்டது. அதையடுத்து, உக்ரைனுக்கு பிப். 22, 24, 26 ஆகிய தேதிகளில் 3 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
அதன்படி முதல் விமானம் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாள்களில் இந்தியர்களை மீட்பதற்கு மேலும் விமானங்கள் இயக்கப்படும் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் கூறினார்.