உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியர்களை மீட்பதற்காக இன்று உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடு வானிலேயே தில்லி திரும்பியது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.