கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரான் மெதுவாக உயிரைக் கொல்லும் தன்மைவாய்ந்தது என்றும், இதிலிருந்து மீள நீண்ட நாள்களாகும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கருத்து தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்றத்தில் காணொலி வாயிலான விசாரணை நடைமுறையைக் கைவிட்டு மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான விகாஷ் சிங், தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆலோசனையின்போது, தற்போது நாட்டில் தினமும் சுமாா் 15,000 பேருக்கு கரோனா தொற்று உறுதியாவதை தலைமை நீதிபதி என்.வி. ரமணா நினைவுகூா்ந்தாா்.
மேலும், ‘கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரான் தீநுண்மி, மெதுவாக உயிரைக் கொல்லும் தன்மைவாய்ந்தது. முதல் அலையின்போது நானும் பாதிக்கப்பட்டு 4 நாள்களில் குணமடைந்தேன். ஆனால், இந்த 3-ஆவது அலையில் பாதிக்கப்படுவோா் குணமடைய 25 நாள்கள் வரை ஆகிறது. எனக்கு இன்னமும் கரோனா பாதிப்பு இருக்கிறது’ என்று அவா் கூறினாா்.