உக்ரைனில் உள்ள கேரள மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்ததுடன் போரை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சட்டப்பேரவையில் பேசியபோது, 'உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். இதுபற்றி ஏற்கனவே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.