உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாராணசி ஆசிரியர்கள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப். 10-ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 5, 6, 7 ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் முறையே பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வாராணசியில் ஆசிரியர்கள் இணைந்து பேரணி நடத்தினர்.
'பிங்க் பேரணி' என்ற பெயரில் பெண்கள் பிங்க் நிற உடையணிந்து இருசக்கர வாகனத்தில் 10 கிமீ தூரத்திற்கு பேரணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.
பேரணியில் கலந்துகொண்ட ஓர் ஆசிரியர் கூறும்போது, 'வாக்களிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பெண்கள் அனைவரும் முன்வந்து ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க வேண்டும்' என்றார்.