புது தில்லி: தில்லி உயர்நீதிமன்றத்துக்கு நான்கு பேரை புதிய நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1, 2022 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நீதித்துறை அதிகாரிகளான ஸ்ரீமதி நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் ஷர்மா, அனூப் குமார் மெந்திரட்டா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோரை தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, மத்திய அரசின் பரிந்துரையே ஏற்று இந்த 4 பேரையும் தில்லி உயர்நீதிமனற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, இவர்கள் விரைவில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் சட்ட செயலாளராக இருந்து வரும் அனூப் குமார், வடகிழக்கு தில்லி மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும், தில்லி அரசின் சட்டத்துறை முதன்மைச் செயலாளராகப் பணிபுரிந்துள்ளார்.
புதுதில்லி மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் தினேஷ் குமார் சர்மா, மே 1, 2017 முதல் ஜனவரி 6, 2020 வரை தில்லி உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாகவும் பணிபுரிந்துள்ளார்.
சுதிர் குமார் ஜெயின் தற்போது ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
நீனா பன்சால் கிருஷ்ணா தற்போது சாகேத் (தென் கிழக்கு) மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.