புது தில்லி: உக்ரைன்-ரஷியா இடையிலான மோதலுக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, பெரும்பாலும் மாணவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் பணியை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது,
பதுங்கு குழிகளில் இருக்கும் இந்திய மாணவர்களின் காட்சிகள் கவலையளிக்கின்றது. பலர் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவரகள், உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலோ, இந்திய தூதரகத்தின் அவசர எண்களிலிருந்து வரும் தகவலோ இல்லாமல் உக்ரைனில் உள்ள எந்தவொரு எல்லைப் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் குழுவினர், சுசீவா எல்லை வழியாக ருமேனியாவை அடைந்ததாக வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.