உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் நான்கு நாடுகளின் எல்லைகளில் கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போர் நடைபெற்று வரும் உக்ரைன் நாட்டிலிருந்து எல்லைகள் வழியாக வரும் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுக்கும் வகையிலும், இந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்று ஹங்கேரி, மால்டோவா வெளியுறவுத் துறை அமைச்சர்களிடம் மததிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு உக்ரைனின் அண்டை நாடுகளான போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்புகொள்வதற்கான இலவச தொலைப்பேசி எண்களையும், இணையதள முகவரியையும் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
உக்ரைனிலிருந்து இதுவரை 4 விமானங்கள் மூலம் 907 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.