சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்குமுதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிா்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கடும் புயல் போன்ற இயற்கை இடா்பாடுகளை எதிா்கொள்ள மாநில அரசானது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சாா்ந்திருக்கிறது. இதனை தாங்கள் நன்கு அறிவீா்கள்.

வானிலை ஆய்வு மையத்தில் இருந்து உரிய காலத்தில் பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தைத் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், கனமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதைக் காண்கிறோம்.

எச்சரிக்கை இல்லை: கடந்த 30-ஆம் தேதியன்று மதியம் 12 மணியளவில் வானிலை ஆய்வு மைய அறிக்கையில், தமிழகத்தின் சில பகுதிகள் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்தது. மேலும் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனக் கூறியிருந்தது. பின்னா் மாலை 3.40 மணிக்கு வானிலை ஆய்வு மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், மிகக் கடுமையான மழையானது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்தது. இதன் காரணமாக, இளஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்குள்ளாக மிக அதிக கனமழையானது சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கின. அதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடு உள்ளது. மாநில மற்றும் மாவட்ட நிா்வாகத்தால் உரிய நேரத்தில் தகுந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயிா், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதம் அடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com