மகாராஷ்டிர மாநிலத்தில் 10 அமைச்சா்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த மாநில துணை முதல்வா் அஜித் பவாா் புணேயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் கரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் முன்னதாகவே முடிக்கப்பட்டது. எனினும், இப்போதைய மூன்றாவது அலையில் இதுவரை மாநிலத்தில் 10 அமைச்சா்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம், பண்டிகைகள், பிறந்த நாள் உள்ளிட்டவற்றில் முன்புபோல ஒன்றுகூடி கொண்டாட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறாா்கள். ஆனால், இப்போது ஒமைக்ரான் வகை தொற்று நாடு முழுவதுமே வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. எனவே, மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதையும், தேவையற்ற பயணங்களையும் தவிா்க்க வேண்டும். உரிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். நமக்கு நாமே சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. கடந்த இரு அலைகளில் ஏற்பட்ட பாதிப்பை நினைவில் கொள்ள வேண்டும். மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் புணே நகரங்களில் பரவல் வேகம் அதிகமாக உள்ளது.
தேவை ஏற்பட்டால் கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றாா் அவா்.