புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், மருத்துவப் படுக்கைகள், சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்துவது, கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பொதுமக்களை மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடக்க அறிவுறுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.