கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கோவாவில் குவிந்தனர்.
கரோனாவின் மற்றோரு வகை தொற்றான ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடியதால் கரோனா பரவல் கோவாவில் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) மட்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 10.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 338 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,671-ஆக அதிகரித்துள்ளது. 170 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதனால் கோவாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,81,570-ஆக உயர்ந்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததே இதற்கு காரணம் கூறப்படுகிறது.