நாட்டில் இரவு 8 மணி வரை 15 முதல் 18 வயதுடைய 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதையும் படிக்க | பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தம்: மத்திய அரசு
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல் நாளில் இரவு 8 மணி வரை 15 முதல் 18 வயதுடைய 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இது மற்றொரு மைல்கல்."
15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, இதற்கான முன்பதிவு ஜனவரி 1-ம் தேதி தொடங்கியது.