புது தில்லி: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில், கரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை அணையம் இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையில், வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, பொது போக்குவரத்து, உணவகம் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் என மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.