லக்னௌ: குடும்பச் சண்டையில், மனைவியை எட்டாவது மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வந்த சஞ்சீவ் (36), தனது மனைவி நீதுவை (32), தாங்கள் குடியிருந்த 8வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். திருமணமானதிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்த நிலையில், கடந்த திங்களன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றிய நிலையில், சஞ்சீவ், தனது மனைவி நீதுவை, தாங்கள் வாடகைக்கு குடியிருந்த 8வது மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டுள்ளார். இதில் நீது சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து நீதுவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சஞ்சீவுக்கு வேறொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிருந்ததும், அதனை நீது கண்டித்ததும் சண்டைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.