ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் பெண் பத்திரிகையாளா் உள்ளிட்ட இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லிபாய்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா்களை ஏலம் விடுவதாக அறிவித்த நிலையில் அந்த செயலி நேற்று(ஜன.3) முடக்கப்பட்டது.
மேலும் ‘புல்லிபாய்’ செயலி குறித்து தில்லியிலும் உத்தர பிரதேசத்திலும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.
இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல் துறைக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுா்வேதி ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், பெண்களை தவறாக சித்தரித்த இந்த வழக்கில் தொடர்புடையதாக, பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பொறியியல் மாணவரை மும்பை காவல்துறையினர் கைது செய்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து வருகின்றனர்.