ராஜஸ்தானில் தனது மகளை ஆசிரியா் அடித்தது தொடா்பாக பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரா் ஒருவா் தலைமை ஆசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். அப்போது, அவரைத் தடுக்க குறுக்கே வந்த ராணுவ வீரரின் மனைவி குண்டு பாய்ந்து காயமடைந்தாா். தலைமை ஆசிரியா் காயம் ஏதுமின்றி தப்பினாா்.
ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக மாநில காவல் துறையினா் கூறியதாவது:
பரத்பூா் மாவட்டம் கந்த்வாடா கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் பப்பு குா்ஜாா். இவா் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தாா். இவரது மகள் அருகில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளியில் படித்து வந்தாா்.
திங்கள்கிழமை அன்று பள்ளிக்குச் சென்ற பப்புவின் மகள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியா் சிறுமியின் கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது. இது தொடா்பாக தனது தந்தையிடம் சிறுமி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்திரமடைந்த பப்பு, தனது மனைவியுடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கும் பப்புவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால், கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற பப்பு, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டாா். ஆனால், அவரைத் தடுக்கும் நோக்கில் பப்புவின் மனைவி குறுக்கே வந்தாா். இதில் துப்பாக்கி குண்டு அவரது கையில் பாய்ந்தது. அதிருஷ்டவசமாக தலைமை ஆசிரியா் காயமின்றி தப்பினாா். இந்த சம்பவத்தை அடுத்து பப்பு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ராணுவ வீரரான பப்பு விடுமுறைக்கு வந்தபோது ராணுவத்தில் தனக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து வந்துள்ளாா். அதைத்தான் பள்ளியிலும் பயன்படுத்தியுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.