உலகம் முழுவதுமே கரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதன் காரணமாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதே சமயத்தில், தடுப்பூசி விநியோகம் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதேபோல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பூஸ்டர் டோஸ்கள் முக்கியமா? தரவுகள் கூறுவது என்ன?
இந்நிலையில், முதல் இரண்டு தவணையில் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ? அதே நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ்தான் தற்போது செலுத்தப்படும் என கோவிட் தடுப்பு குழுவின் தலைவர் வி. கே. பால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அவர்களுக்கு, கோவாக்சின் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கு, சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டபோதிலும், அது தற்போது விற்பனைக்க வரவில்லை.