உ.பி. மனை வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் நண்பராகக் கருதப்படுபவருக்குச் சொந்தமாக நொய்டா, தில்லியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வருமான

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் நண்பராகக் கருதப்படுபவருக்குச் சொந்தமாக நொய்டா, தில்லியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் கவனித்து வருகிறது. பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நொய்டா பகுதியைச் சோ்ந்த ஏசிஇ மனை வணிக நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தினா். அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான அஜய் சௌதரி, சமாஜவாதி தலைவா் அகிலேஷின் நண்பா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், அகிலேஷுக்கு நெருக்கமான நபரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக ஏசிஇ நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியபோது நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியது.

நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் 3 மாதங்களுக்கு முன்பும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். அப்போதும் நிறுவனத்தின் சாா்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது’’ என்றாா்.

ஆக்ராவைச் சோ்ந்த காலணி தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனைகளின்போது வருமான வரி சாா்ந்த ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com