புது தில்லி: தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்காக 100 ஜோடி சணல் காலணிகளை அனுப்பிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வாராணசியின் வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, காசி விஸ்வநாதர் கோயிலின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகிறார் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. பிப்ரவரியில் தீவிரமடைந்து பிறகு குறையக்கூடும்: நிபுணர்
புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது, கோயிலுக்குள் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும், பொதுவாகவே கோயில்களுக்குள் காலணிகளை அணிய தடை இருப்பதால், காலணி அணியாமல்தான் பணியாற்றி வருகிறார்கள்.
கோயில் பூசாரி முதல், தூய்மைப் பணியாளர்கள் வரை யாருமே காலணி அணிவதில்லை. இதனை இந்நிகழ்வின்போது கவனித்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லி திரும்பியதும் 100 ஜோடி சணல் காலணிகளைத் தயாரிக்க உத்தரவிட்டிருந்தார். கடுங்குளிரில் காலணி அணியாமல் அங்கு பணியாற்றுவது என்பது கடும் துன்பமளிக்கும் என்பதை உணர்ந்த மோடி, உடனடியாக அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்தக் காலணிகள் காசி விஸ்வநாதர் கோயில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.