25 ஆவது தேசிய இளைஞர் விழா: 12 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

25 ஆவது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி, 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.  
25 ஆவது தேசிய இளைஞர் விழா: 12 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்


புதுதில்லி: புதுச்சேரியில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ள 25 ஆவது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி, 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

குறு-சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் சார்பில், புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மின்னணு சாதன வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பிரிவில் கவனம் செலுத்தும் நோக்குடன் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த தொழில்நுட்ப மையம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதுடன் ஆண்டுக்கு சுமார் 6,400 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். 

புதுச்சேரி அரசின் சார்பில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி திரையரங்குடன் கூடிய கலையரங்கமான பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட இருக்கும் இந்த மண்டபம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடியதாக இருக்கும்.

கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்த விழா 12 மற்றும் 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. தொடக்க விழாவைத் தொடர்ந்து, இளைஞர்கள் சார்ந்த வளர்ச்சி என்ற கருத்துடைய விவாதங்களை கொண்டதாகவும், புதிதாக உருவாகும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு சார்ந்த வளர்ச்சி; தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்பு; உள்நாட்டு மற்றும் பண்டைக்கால ஞானம்; மற்றும் தேசிய பண்பு, தேச நிர்மாணம் மற்றும் அக வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் போது, “நான் கனவு காணும் இந்தியா”  மற்றும் “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள்” குறித்த கட்டுரைகளையும் பிரதமர் வெளியிடவுள்ளார்.  இந்த இரு தலைப்பில் இளைஞர்கள் அனுப்பிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. 

இந்த விழாவில் புதுச்சேரி, ஆரோவில், அரிதாகி வரும்  நகர அனுபவம், உள்நாட்டு விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புற நடனம் குறித்து பதிவு செய்யப்பட்ட விடியோ தொகுப்புகளும் திரையிடப்படுகிறது. 

மேலும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் வீரர்களுடனான திறந்தவெளி விவாதங்கள் இடம்பெறுவதுடன்  மாலையில் நேரலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. அரங்கில் காலையில் காணொலி காட்சி மூலம் யோகா பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும் இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும். 

இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களை, ‘ஒன்றுபட்ட தேசம்-வலிமையான தேசம்’ என்ற அம்சத்தின் கீழ், ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com