தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். இவ்விரு திட்டங்களையும் பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.