ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஹசன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் இருந்து வெடிபொருள்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.