சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் உ.பி. மூத்த அமைச்சர்
யோகி ஆதித்யநாத் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான சுவாமி பிரசாத் மெளரியா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரிடையே மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்படும் சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து சுவாமி பிரசாத் எழுதிய கடிதத்தில், மாறுபட்ட சித்தாந்தமாக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினேன். ஆனால், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுவதால் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியில் சுவாமி பிரசாத் உள்ளிட்ட சில தலைவர்கள் இணைந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய சுவாமி பிரசாத் பாஜகவில் இணைந்தார். இவரது மகள் சங்கமித்ரா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், உ.பி. பேரவைக்கு 7 கட்டங்களாக பிப்ரவரி 10ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கெண்ணிக்கையானது மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.