பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றிக்கான பிரசாரத்தை செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியானது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் இன்று மொஹாலியில் பேசுகையில்,
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும், வளம் பெறுவதற்கும் 10 அம்ச 'பஞ்சாப் மாதிரி' திட்டத்தை உருவாக்கியுள்ளோம். வேலை வாய்ப்பிற்காக கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு திரும்பும் அளவிற்கான வளமான பஞ்சாபை உருவாக்குவோம்.
பஞ்சாபிலிருந்து போதைப்பொருள் கும்பலை ஒழித்து, அனைத்து கொலை வழக்குகளிலும் நீதியை உறுதி செய்வோம், ஊழலை ஒழிப்போம். நாங்கள் 16,000 மருத்துவமனைகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம்.
அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்குவோம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்குவோம் எனத் தெரிவித்தார்.