சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியம் என்றும், நாடே இளைஞர்களைப்போன்று புத்துணர்வுகொண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய இளைஞா் விழாவை பிரதமா் நரேந்திர மோடி தில்லியிலிருந்து காணொலி வாயிலாக புதன்கிழமை காலை தொடக்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜா் மணிமண்டபம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. வளாகத்தில் அமைந்துள்ள ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மையத்தையும் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியம். ஒவ்வொரு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இது உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை நோக்கிய பாதையில் புதிய சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.
ஜனநாயகமும், மக்கள் தொகையும் இந்தியாவின் இரு பெரும் பலம் என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. அத்தகைய ஜனநாயக மாண்புகளை நாட்டின் அனைத்து மக்களிடையேயும் இளைஞர்கள் கொண்டுசெல்ல வேண்டும். இந்தியா இளைஞர்களை வளர்ச்சியின் உந்து சக்தியாக கருதுகிறது என்று கூறினார்.
மேலும், 2022 இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக வாழ்ந்து சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குகின்றனர். இளைஞர்களின் பலம் நாட்டை மிகுந்த உயரத்திற்கு கொண்டுசெல்லவுள்ளது என்று கூறினார்.