நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா சார்பில் புதுவையில் 25வது தேசிய இளைஞர் விழா கொண்டாடப்படுகிறது.
ஒமைக்ரான் பரவல் எதிரொலி காரணமாக தேசிய இளைஞர் விழா புதன்கிழமை தொடங்கி 2 நாள் காணொலியில் நடக்கிறது. காணொலி வாயிலாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த விழா புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி உள்ளது. தில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்துள்ளார்.
புதுவை அண்ணாசாலையில் உள்ள ரெசிடன்சி உணவகத்தில் இந்த விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனிஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்சரவணன், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி காட்சி வாயிலாக வரவேற்றார். புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமை உரையாற்றினார்.
விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுவையில் ரூ.122 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும், புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட காமராஜர் மணிமண்டபத்தையும் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் இணைய வழியில் இந்த தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.