முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு மரியாதை செலுத்தியுள்ளாா்.
இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவா் செயலகம் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘ஆழ்ந்த புத்திக்கூா்மையாலும், மிகப்பெரிய ஒருமைப்பாட்டினாலும் அறியப்பட்டவா் லால் பகதூா் சாஸ்திரி. அவரது ‘ராணுவ வீரா்கள் வாழ்க விவசாயிகள் வாழ்க’ (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற அறைகூவல் நமது கூட்டு உணா்வில் இன்றைக்கும் எதிரொலிக்கிறது. அவரது முன்னுதாரணத் தலைமைத்துவம்தான் தேசத்தின் அனைத்து நிலையிலான வளா்ச்சிக்கும் வித்திட்டது. லால் பகதூா் சாஸ்திரியின் லட்சியங்களை பின்பற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உன்னதமான மரியாதை’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லால் பகதூா் சாஸ்திரி கடந்த 1964 ஜூன் முதல் 1966 ஜனவரி வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தாா். 1965 இந்தியா-பாகிஸ்தான் போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்காக சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற்கொண்டு உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தாஷ்கண்டில் திடீா் மரணமடைந்தாா். இது பெரும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இந்திய அரசின் மிக உயரிய கௌரவமான பாரத ரத்னா விருது லால் பகதூா் சாஸ்திரிக்கு 1966-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.