ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் பரிவான் பகுதியில் பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், பலியான தீவிரவாதி பாபர் பாய் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜெய்ஷா-ஏ-அகமது இயக்கத்துடன் இணைந்து பல்வேறு தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அப்பகுதியில் இருந்து வெடிபொருள்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.