பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிகழாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனவரி 31-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் இணைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு அமர்வுகளாக நடைபெறும் கூட்டத்தொடரானது பிப்ரவரி 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மார்ச் 14-ம் தேதி கூடுகிறது.
இதையும் படிக்க | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்: விசாரணைக் குழு தகவல்
கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரத்தில் இருக்கும். இரண்டாவது அமர்வின்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதியிலிருந்து 8-ம் தேதிக்குள் நடத்தப்பட்ட பரிசோதனையில் மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்கள், மக்களவைச் செயலகத்தில் பணிபுரியும் 200 ஊழியர்கள், மற்ற பிரிவுகளில் பணியாற்றும் 133 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.