கத்தாரில் கரோனா தொற்று பாதித்து மூன்று வாரக் குழந்தை உயிரிழந்துள்ளது. இது நாட்டில் தொற்றுநோய்க்குப் பலியாகும் இரண்டாவது குழந்தையாகும்.
பொது சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி,
தொற்றுக்கு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகளும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பாதித்து பலியாகும் இரண்டாவது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வயதினரும் கரோனா தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பொதுவாக கரோனா குழந்தைகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதும் தொற்று காரணமாக குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.
கத்தாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா அலையில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றின் ஒருவகையான ஒமைக்ரான் வேகமாகவும், அதிகளவிலும் பரவி வருகின்றது.
யுனிசெப் அளித்த தகவலின்படி, உலகளவில் கரோனா வைரஸால் 3.5 மில்லியன் இறப்புகளில் 0.4 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது. அதில், 9 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.