மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வரை அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவருபவர் தாக்கியுள்ளார். பேராசிரியர் பாயந்து சென்று தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை பேராசிரியர் பிரதீப் அலௌன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உஜ்ஜைனியில் உள்ள நாகுலால் மாளவியா அரசு கல்லூரியில் இவர் பணிபுரிந்துவருகிறார்.
இந்த சம்பவம் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்த விடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலான பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபாலிலிருந்து உஜ்ஜைனி கல்லூரிக்கு இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விரிவாக பேசுகையில், "நாங்கள் ஏற்கனவே குறைந்த பணியாளர்களை வைத்துள்ளோம். ஜனவரி 15ம் தேதி கல்லூரி தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது. இதைப் பற்றி பேச நான் அவரை அழைத்தேன், ஆனால் அவர் கோபமடைந்து என்னைத் திட்டவும், குத்தவும் தொடங்கினார்" என்றார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள துணை பேராசிரியர், "மேடம்வார் பதவியில் இருந்த காலத்தில், மூன்று பேர் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர். அவர் அனைத்து ஊழியர்களிடமும் தவறாக நடந்து கொள்கிறார். அவர் என்னை தனது அறைக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது" என்றார்.
இதையும் படிக்க | பட்ஜெட்: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
கல்லூரி முதல்வர் அறையிலிருந்து கிடைத்த சிசிடிவி விடியோவில், இருவரும் வாக்குவாதம் மேற்கொள்வது போன்றும், ஒரு கட்டத்தில் கையை காட்டி பேராசிரியரை வெளியே செல்லும்படி முதல்வர் உத்தரவிடுவது போலவும் பதிவாகியுள்ளது.
இறுதியாக, எதிரில் அமர்ந்திருந்த பேராசிரியர் பாய்ந்து சென்று முதல்வரை தாக்குவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெளியில் இருந்த ஐந்து பேர், சத்தம் கேட்டு, அறைக்குள் வந்து இருவரையும் சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர்.