சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் (ஜன.19) மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை (ஜன. 20) காலை கோயில் நடை சாத்தப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12ம்-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொங்கல் நாளான கடந்த 14-ஆம் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது.
கடந்த ஐந்து நாள்களாக திருவாபரண அலங்காரத்துடன் இருந்த ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். மாலை அணிந்து வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றுடன் சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நாளை காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.