உத்தரப் பிரதேச மகிளா காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் பிரியங்கா மௌரியா மற்றும் சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ பிரமோத் குப்தா ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தலையொட்டி கட்சி மாறுதல் நிகழ்வுகளும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றன.
இதில், உத்தரப் பிரதேச மகிளா காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் பிரியங்கா மௌரியா இன்று பாஜகவில் இணைந்தார். இவர், நாடு முழுவதும் நடைபெறும் மகிளா காங்கிரஸ் பேரணி விளம்பரங்களில் இடம்பெற்றிருந்தார். வரும் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரியங்கா மௌரியா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
அதுபோல, சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ பிரமோத் குப்தாவும் இன்று பாஜகவில் இணைந்தார்.