பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்குகளை தளர்த்தக் கோரி கோஷங்கள் எழுந்து வருகின்றன. காரணம்.. கரோனா பாதிப்பு பெரிய அளவில் குறைந்து வருவதே.
குறிப்பாக பெங்களூருவில் நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்பு பெரிய அளவில் குறைந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் கரோனா பாதிப்பு 24,135 ஆகக் குறைந்திருப்பதோடு, அன்றைய நாளில் கரோனாவிலிருந்து 18,081 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதித்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட தெருக்கள் 444 ஆகக் குறைந்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த 2,109 தெருக்கள் நேற்று ஒரே நாளில் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதாவது புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், கடந்த ஆறு நாள்களில் பெங்களூருவில் மட்டும் கரோனா பாதிப்பு 200 மடங்கு அதிகரித்தது. கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து, கடந்த சில நாள்களாக நான்கு இலக்கத்தில் பதிவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தின் முதல் 12 நாள்களில் மற்ற மாவட்டங்களில் 20,843 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் மட்டும் 71,339 ஆகப் பதிவானது. ஜனவரி 13 முதல் 18 வரையிலான காலக்கட்டத்தில் பெங்களூருவில் கரோனா பாதிப்பு 1.2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.