புதுதில்லி: சோமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து பிரதமர் உரையாற்றுகிறார்.
ஆண்டுதோறும் சோமநாதர் கோயிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போதுள்ள சுற்றுலா மாளிகை, கோயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் புதிய மாளிகை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதையடுத்து சோமநாதர் கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. இதில் சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் என உயர்தர வசதிகளுடன் புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரையின் இயற்கையை ரசிக்கும் வகையில் இந்த மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது.