தேசிய கொடியின் படம் பொறித்த காலணி உள்ளிட்ட பொருள்களை இணையதளத்தில் விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனத்தின் உரிமையாளா், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபி-க்கு அந்த மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் போபாலில் செய்தியாளா்களிடம் கூறியது:
அமேசான் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள்களில் நமது தேசிய கொடியின் படம் இடம்பெற்றிருப்பதாக எனது கவனத்துக்கு தகவல் வந்தது. காலணியில் கூட தேசிய கொடி பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதை சகித்துக்கொள்ள இயலாது. அடிப்படையில் இது தேசிய கொடியின் விதிகளை மீறிய செயலாகும். ஆகையால் அமேசான் நிறுவன உரிமையாளா், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றாா் நரோத்தம் மிஸ்ரா.
அமேசான் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சா் உத்தரவிடுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய பிரதேச இளைஞா் ஒருவா் அமேசான் இணையதளம் வாயிலாக விஷ மாத்திரைகளை வாங்கி தற்கொலை செய்து கொண்டாா். அப்போதும் அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல மத்திய பிரதேச மாநிலம் பீண்ட் மாவட்டத்தில் இனிப்புப் பொருள் என்ற இணையத்தில் கஞ்சா விற்ற்காகவும் அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இதனிடையே நிறுவன விதிகளுக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த மூன்றாம் நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமேசான் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் அமேசான் இணையதளத்தில் மூன்றாம் நபா்கள் தங்கள் பொருள்களை வாடிக்கையாளா்களிடம் நேரடியாக விற்பனை செய்யலாம் என்றும் அந்த பொருள்கள் நிறுவன விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.