குடியரசு நாள் விழாவின்போது இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொலி வைரலாகி வருகிறது.
நாட்டின் 73-வது குடியரசு நாள் விழா தில்லி ராஜபாதையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்களின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதில், விமானப் படை நடத்திய சாகச நிகழ்வானது விமானி அறையிலிருந்து முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையில் விமானப் படையின் 75 விமானங்கள் சாகச நிகழ்வில் பங்குபெற்றன. ரபேல், மிக்-29 உள்ளிட்ட விமானங்களின் விமானி காக்பிட்டிலிருந்து எடுக்கப்பட்ட காணொலியை மத்திய பாதுகாப்புப் படை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.