தேசியமயமாக்கப்பட்டு சுமார் 69 ஆண்டுகளுக்குப் பின், ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் வசம் வந்திருப்பதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு புது தில்லியில் நடைபெற்றது.
புது தில்லியில் நடைபெற்ற ஏர் இந்தியாவை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், டாடா சன்ஸ் நிறுவனர் சந்திரசேகரன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாடா சன்ஸ் நிர்வாகி என். சந்திரசேகரன், டாடா குழுமத்தின் வசம் ஏர் இந்தியா திரும்ப வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. உலகத் தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து டாடா குழுமம், ஏர் இந்தியா நிர்வாகத்தையும், ஏர் இந்தியா விமான சேவையை நிர்வகிக்கும் பொறுப்பையும் இன்று முதல் ஏற்கிறது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
என்ன நடந்தது?
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.
சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமான நிலையில் தற்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கும் டாடாவுக்குமான தொடர்பு என்ன?
கடந்த 1932-ஆம் ஆண்டு ஏா் இந்தியா நிறுவனத்தை ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 1946-ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது.
1948-ஆம் ஆண்டு சா்வதேச விமான சேவையை துவக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது.
அதன் பிறகு, கடந்த 1953-இல் ஏா் இந்தியா நிறுவனம் தேசியமாக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தை தொடங்கிய டாடா நிறுவனத்துடனே ஏா் இந்தியா ஐக்கியமாகி உள்ளது.
மேலும், ஏர் இந்தியா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் 1800 இறங்குதளங்களையும், 4,400 விமான நிறுத்துமிடங்களையும் (பார்கிங் ஸ்டாட்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.