தில்லியில் 20 வயதான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர் தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியரசு நாளான நேற்று(ஜன.26) தில்லியின் ஷாதரா மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூர்பா நகரில் முன்பகை காரணமாக ஒரு கும்பல் 20 வயதான இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரின் தலைமுடியை வெட்டி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதை வேடிக்கைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும் அப்பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சில பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அடிக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் அவர் டிவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் விடியோவை வெளியிட்டு ’இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்’எனத் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.