பஞ்சாபில் ராகுல் காந்தி தலைமையிலான கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக இன்று பஞ்சாப் சென்றுள்ளார்.
வியாழக்கிழமை காலை தில்லியிலிருந்து அமிருதசரஸ் வந்த ராகுல் காந்தி, மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 117 வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். மேலும் கோயிலிலே மதிய உணவும் அருந்தினார்.
இதையடுத்து, பிற்பகலில் பஞ்சாப் தேர்தல் குறித்த கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி காணொலி மூலம் பங்கேற்கிறார். இதில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, ரவ்நீத் சிங் பிட்டு, ஜஸ்பீர் சிங், ப்ரினீத் கவுர், முகம்மது சாதிக் ஆகிய 5 எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தலைமையை எதிர்த்து 5 எம்.பி.க்களும் கூட்டத்தை புறக்கணித்ததாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் சிங் கூறுகையில், 'கூட்டத்தில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இன்று நடைபெறும் நிகழ்வு சட்டப்பேரவையில் போட்டியிடும் 117 வேட்பாளர்களுக்கானது. முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர்கூட எங்களை அழைக்கவில்லை. அழைப்பு வந்திருந்தால் கண்டிப்பாக சென்றிருப்போம்' என்று கூறியுள்ளார்.