கேரளத்தின் கொல்லம் நோக்கிச் சென்ற ரயிலின் நான்கு பெட்டிகள் வியாழன் இரவு ஆலுவா ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஆந்திரத்திலிருந்து சிமென்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நுழையும்போது ரயிலின் 2-வது, 3-வது, 4-வது மற்றும் 5-வது பெட்டிகள் தடம் புரண்டன.
இதைத்தொடர்ந்து, பல்வேறு ரயில் நிலையங்களில், பல ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டதால், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சரிபார்ப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. ஒரு பாதை வழியாக ஏற்கனவே சில ரயில்கள் இயக்கத்தில் உள்ளன. 2-வது பாதை விரைவில் சரிசெய்யப்படும் என்று திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் ஆர்.முகுந்த் கூறினார்.
குருவாயூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கண்ணூர் எக்ஸ்பிரஸ், கோட்டயம் - நிலம்பூர் எக்ஸ்பிரஸ், நிலம்பூர் - கோட்டயம் எக்ஸ்பிரஸ், குருவாயூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - ஆலப்புழா விரைவு ரயில் உள்பட மொத்தம் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் தண்டவாளத்தை மாற்றும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.