போபால்: பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சுவாமி விஷ்ணுவின் கற்சிலை பந்தவ்கார் தேசியப் பூங்காவில், இந்திய தேசிய கலை மற்றும் பழம்பெரும் கலாசார அமைப்பினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்சுரிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த விஷ்ணு சிலை சேஷ சாயி என்று அழைக்கப்படும் வடிவமைப்பில் அமைந்துள்ளது. இது வரலாற்று ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பழம்பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இவ்வளவு புராதான பெருமைகளைக் கொண்டிருக்கும் இந்த விஷ்ணு சிலையானது, இத்தனை ஆண்டுகளும், பாசிகளும், அழுக்குகளும் மூடிக் கிடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியிருக்கும் இந்திய தேசிய கலை மற்றும் பழம்பெரும் கலாசார அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் பழமையான சிலை இதுவாகும்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், தாலா புலிகள் சரணாலயத்துக்கு மிக அருகே நடந்து வரும் இந்த அகழ்வாராய்ச்சியில், கண்டுடெடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷ்ணு சிலையானது 1,000 ஆண்டுகள் பழமையானது. 40 அடி நீளம் கொண்டது. கடந்த 2 மாதங்களாக இந்த சுற்றுலாத் தலம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது.
பாசி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக படிந்திருந்ததால், இந்த சிலைக்கு எந்த சேதமும் ஏற்படாதவகையில், நீராவி முறையில் சுத்தம் செய்யப்பட்டு, பாசிகள் அகற்றும் பணி நடந்தது.
இதில் மேலும் முக்கியத்துவம் தரும் தகவல் என்னவென்றால், விஷ்ணுவின் சிலைக்கு அருகே பிரம்மா மற்றும் சிவலிங்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடனடியாக இந்த சிலைகளின் புகைப்படங்கள் பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன் காலம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.