பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை ஆளும் காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி என பலமுனைப் போட்டி நிலவுகின்றது.
காங்கிரசில் இருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியதுடன் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். கூட்டணி தொகுதி ஒதுக்கீடுகளின்படி, 37 தொகுதிகளில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட கேப்டன் அமரீந்தர் சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பாட்டியாலா மக்களின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுவதாகவும் தொகுதியின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியளிப்பதாகவும் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.